Sunday, August 20, 2006

கனடீய தமிழ் இளைஞர் யுவதிகளின் இருத்தல்கள்

By டிசே தமிழன்

Wednesday, August 16th, 2006 at 9:35 am
http://elanko.net/pathivu/?p=210

10Chandravathanaa says: Your comment is awaiting moderation.

August 20th, 2006 at 5:25 am
எமது இளைய சமூகத்தில் வேர் கொண்டிருக்கும் பாரிய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.
இப்பிரச்சனைக்கு முற்று முழுதாகப் பெற்றோரையும் குற்றம் கூறி விட முடியாது. சில சமயங்களில் பெற்றோரின் பிள்ளைகளிடமிருந்தான அதீதமான எதிர்பார்ப்பும் ஒரு காரணமாயிருந்தாலும் வேறும் பல காரணங்கள் இருக்கின்றன. டிசே குறிப்பிட்டது போல ஒரு பெண்ணுக்காக தமக்குள் ஆளாளுக்கு வெட்டிக் கொத்துப் பட்ட கதைகள் ஜேர்மனியிலும் உண்டு.

போரின் பாதிப்பும், புலம் பெயர்வு அவர்களை அறியாமலே அவர்களுள் ஏற்படுத்திய தாக்கமும், இரு கலாச்சாரங்களுக்குள்ளான முரண்பாடுகளில் வளர வேண்டிய சூழ்நிலையும், தாழ்வுமனப்பான்மையில் நான்தான் பெரியவன், வலியவன் என்று காட்டிக் கொள்ள வேண்டிய நிலைப்பாடும்…. என்று பல காரணிகள் இந்த புலம் பெயர் இளைஞர்கள் யுவதிகளின் இருத்தல்களை நிர்ணயிக்கின்றன.

இங்கு பெற்றோரின் பங்கு இத்தனை சிக்கல்கள் தமது பிள்ளைகளுக்கு இருக்கிறதென்று என்பதை உணர்ந்து அவர்களை அணுக வேண்டிய பொறுப்பான செயற்பாடே. நாங்கள் பெரியவர்கள். உன்னைப் பெற்றவர்கள். நாம் சொல்வதுதான் சரி… என்ற பாணியில் அவர்களை அணுகாமல் அவர்கள் மனதின் உளைச்சல்களையும் இயலாமைகளையும் கருத்தில் கொண்டு தோழமையோடு அணுகி.. நட்போடு கதைக்கும் போது பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உடனே இல்லாவிட்டாலும் அந்த இளைஞர்கள் பின்னராவது சிந்தித்து செயற்பட பெற்றோரின் இத்தகைய அணுகல் உதவும்.

இத்தனை கவனமும் ஒரு குறிப்பிட்ட வயது வரையே. அது தாண்டியதும் அந்தப் பிள்ளைகள் தாமாக மாறுவார்கள். அந்தக் குறிப்பிட்ட வயதுக்குள் பாரதூரமாக எதுவும் நடந்து விடாது… அவர்கள் பாதைகளும் மாறி விடாது இருக்க பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடனும் நட்புடனும் பிள்ளைகளுடன் பழக வேண்டும்.